Sunday, March 30, 2008

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - பகுதி 3

Hunger in the world of Plenty - Part 3

இந்தியாவின் நெடும்பசி:

உலகின் ஒட்டுமொத்த 860 மில்லியன் பட்டினியால் வாடும் மக்களில் மூன்றில் ஒருபங்கு நம் சகோதர இந்தியர்கள்தான்.

ஐ.நாவின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவின் 2003 ம் ஆண்டறிக்கையின் படி, இந்திய அரசின் அதிகாரபூர்வ அறிக்கையின் படி 233 மில்லியன் மக்கள் நெடும்பசியால் வாடுகிறார்கள். ஆனால் அரசுசாரா பொதுநல அமைப்புகள் மேற்கண்ட அரசின் கணக்கு குறைவானதே என்றும் பல்வேறு அறிக்கைகளில், ஆய்வு முடிவுகளில் பதிவு செய்கிறார்கள் (ஏறத்தாழ 525 மில்லியன் மக்கள்). புள்ளிவிபரங்களைத் தேடி எடுத்துப் பார்க்கும்போது எண்ணிக்கைகளில் மில்லியன் கணக்குகளில் வேறுபாடு இருந்தாலும், உண்மையானது மிகவும் கொடூரமானதாக இருக்கிறது என்பதே வருத்தத்திற்குறிய உண்மை. நாடு முழுவதிலிருந்தும், பரவலாக கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களானது போதுமான பதப்படுத்தும், பாதுகாக்கும் வசதியின்றி, முறையான வினியோகமின்றி யாருக்கும் உபயோகப்படாமல் வீணாக்கப்படுகிறது என்பது மிகவும் கண்டனத்திற்குறியது. மேலும், கள்ளச்சந்தை, பதுக்கல், உணவு தானியங்கள் கடத்தல், அரசின் குறைந்த விலை வினியோக அமைப்புகளில் (ரேஷன் கடைகளில்) நடக்கும் கள்ளத்தனங்களும், முறைகேடுகளும், சமூகவிரோத சுயலாப முதலாளிகளும் கோடிக்கணக்கான மக்களின் பட்டினிப் பசியை ஆண்டுக்கு ஆண்டு அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படை.

சமூக விரோதிகளுக்கு (சுயநல அரசியல்வாதிகள், சுயநல முதலாளிகள், சமுதாய தலைவர்கள், கள்ள வியாபாரிகள்) ஏதேனும் ஒரு மாநிலம் வெள்ளத்தாலோ, வேறு இயற்கைச் சீற்றங்களாலோ பாதிக்கப்பட்டுவிட்டால் கொண்டாட்டம்தான், அரசு அவசரகதியில் அறிவிக்கும் நலத்திட்டங்கள், கோடி கோடியாகப் பணம் கொள்ளையடிக்க, கேள்வி கணக்கற்ற வேறு சந்தர்ப்பங்கள் கிடைப்பது அரிது. ( எ.கா: அஸ்ஸாம் வெள்ள நிவாரண அரிசி ஊழல், சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நலத்திட்டங்கள்)

63% இந்தியக் குழந்தைகள் பட்டினியால் ....ஊட்டச்சத்துக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமானோர் மஹாராஷ்டிரா, பீகார், ஒரிஸ்ஸா, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழர்களாகிய நாம், ஒரு விசயத்துக்காக கொஞ்சம் பெருமைப் பட்டுக்கொள்ளலாம், ஆம் தமிழ் நாட்டிலும், கேரளாவிலும்தான் (ஒப்பீட்டளவில்) நெடும்பசியால் வாடுவோர் எண்ணிக்கைக் குறைவு (47% சதவீதத்தினர்). தமிழக அரசின் மதிய உணவுத்திட்டமே காரணம்.

பல்வேறு பரிமாணங்களில் இந்தியாவின் பட்டினியைப் பற்றியே பல பக்கங்கள் எழுதலாம் மிகவும் குற்றவுணர்ச்சியோடு....

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு

- நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லை (குறள்-740)

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராதியல்வது நாடு.

- பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு (குறள் 734)

பட்டினியின் முகங்கள்
உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் நூறு லட்சம் மக்கள் பட்டினியாலும், பட்டினி சார்ந்த நோய்களாலும் இறக்கின்றனர். வெறும் 8 சதவீத்ததினர் மட்டுமே பூகம்பம், வெள்ளம் மற்றும் போர் போன்ற காரணிகளால் பாதிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் இலகுவாக மறக்கப்படுகிறார்கள். சமீப வரலாற்றைப் புரட்டுங்கள் 1984-85 ம் வருடங்களில் எத்தியோப்பியாவில் கடும் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், பங்களாதேஷ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உள்நாட்டுப் போரால் உருக்குலைந்த காங்கோவிலும் லட்சக்கணக்கான மக்கள் மறக்கப்பட்டுவிட்டார்கள். நம் சிந்தனையின் குரூர ரசனைக்கு ஒவ்வொரு நாளும் சுவாரசியம் மிகுந்த பேரழிவு செய்திகள் நம் கிளர்ச்சியைத் தூண்டியவண்ணம் பழைய செய்திகளை மறக்கவைத்து விடுகிறது. ஆனால் நெடும்பசியால் பாதிக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தலைப்புச் செய்திகளில் வருவதில்லை.
கூறியது கூறல் குற்றமெனினும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிறேன், ஒட்டுமொத்த அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியனின் மக்கள் தொகைக்கு நிகரான அளவில் மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள்.

வயது வித்தியாசம் இல்லாமல் பாலூட்ட இயலாத தாய்மார்களின் குழந்தை முதல், கவனிக்கவோ அக்கறை காட்டவோ, முதியோர் இல்லங்களுக்கு பணம் கட்டவோ யாரும் இல்லாத முதியோர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் வாடுகின்றனர். வழியறியாது கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து, நம் நாகரீகத்தின் கறை என்று குற்றவுணர்ச்சியில்லாது நம்மை விமர்சிக்கவைக்கும் நகர்ப்புறங்களின் சேரிப்பகுதியில் வாழ்பவர்களும், பிற கனவான்களின் நிலத்தில் உழைத்துக் கொண்டேயிருக்கும், பரந்து விரிந்த பூமியில் தனக்கென் நிலமற்ற விவசாயக் கூலிகளும், அநாதையாக்கப் பட்ட குழந்தைகளும், உயிர்வாழ்வதற்கு கூட அதீத ஊட்டச்சத்துள்ள உணவுத் தேவையுடைய ஏழை மக்களும், குழந்தைகளுக்குப் பாலூட்ட சக்தியற்ற ஒரு கவளம் சோறுகூட இல்லாத அப்பாவிப் பெண்களும்..... வயது வித்தியாசம் இல்லை. சொல்லக் கொதிக்குடா நெஞ்சம், ஆம் வெறும் சோற்றுக்குத்தான் இந்தப் பஞ்சம்.
பாதிக்கப்பட்டவர்களை, அதன் கோரப்பிடியில் துரதிருஷ்ட வசமாய் சிக்கிக் கொண்டவர்களை அவர்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் நோயுற்றவர்களாக, பலவீனர்களாக, வலிமையற்றவர்களாக வைத்திருப்பதோடு மட்டுமல்ல அவர்களின் தொடர்ச்சியான சந்ததியினரையும் ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்டது நெடும்பசி.


இவ்வாறாக நெடும்பசியின் விளைவானது பரம்பரைச் சக்கரமாக சுற்றிக் கொண்டேயிருக்கும். நெடும்பசிக்கு ஆளான பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகள் குறைவான எடையுடையவர்களாக (போதுமான எதிர்ப்புச் சக்தியற்றவர்களாக, நோய்க்கு ஆளாகக் கூடியவர்களாக பிறப்பார்கள். ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் குழந்தைகள் குறைவான எடையுடையவர்களாக (Low Birth Weight-LBW) பிறக்கின்றனர். அதில் 30 சதவீதத்தினர் இந்தியாவிலும், பங்களாதேஷிலும். ஒருவேளை குழந்தைப் பருவத்தில் அவர்கள் மரணத்திலிருந்து தப்பிவிட்டாலும் ஊனமுடையவர்களாக, உடல் மன வளர்ச்சியவற்றவர்களாக பரிணமிக்கும் பரிதாபம் நிகழ்கிறது. இதே காரணத்தினால்தான் வளர்ந்து பெரியவர்களாக ஆகும் போது உழைக்கும், பொருளீட்டும் வலிமையற்றவர்களாகவும், அதிகம் நோய்வாய்ப்படும் உடல்வாகைக் கொண்டவர்களாகவும், சிந்தனைத் திறன் குறைந்தவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். (எப்போதேனும் தொலைக்காட்சியில் வரும் செய்திகளில், காலராவினால், டெங்கு காய்ச்சலினால், மூளைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்து போகும் குழந்தைகள் பணக்கார/மேல்தட்டு வர்க்கத்துக் குழந்தைகளாக இருந்ததுண்டா? யாரேனும் கண்டதுண்டா அப்படி?)

இவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
நெடும்பசிக்கு ஆளானவர்களில் முக்கால் சதவீதத்தினர் ஆசியாவின், ஆப்பிரிக்காவின் கிராமப்புறங்களில் உணவுத்தேவைக்கு விவசாயத்தை மட்டும் நம்பியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு வருவாய்க்கான மாற்று ஏற்பாடுகளோ, பொருளீட்டுவதற்கான வேலை வாய்ப்புகளோ அற்றவர்களாக பட்டினிப் பசிக்கு ஆளாகக் கூடிய ஆபத்தில் இருக்கிறார்கள். ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய நல அமைப்பின் (FAO) மதிப்பீடுகளின் படி, 410 மில்லியன் மக்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. இயற்கைச் சீற்றத்தினால் உண்டாகும் பஞ்சத்தினால் பாதிக்கப்படும் நிலப்பரப்புகளில் வாழ்பவர்கள். இதில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் நிலமற்ற ஆனால் விவசாயக் கூலிகள். மற்ற 10 சதவீதத்தினர் (80 மில்லியன்) மீன்பிடித்தலை உணவுத் தேவைக்கான தொழிலாகவும், வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்ட காட்டுப்பகுதிகளில் வாழ்பவர்கள். மீதமுள்ள 20 சதவீதத்தினர் வளர்ந்து வரும் நகரங்களில், மேட்டுக்குடியினரால் குற்றவாளிகளின் கூடாரமாகச் சித்தரிக்கப்படும் சேரிகளில் வாழ்பவர்கள். பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி மற்றும் பயிற்சியகத்தினரால் (International Food policy research Institute - UN) 14 வளர்ந்து வரும் நாடுகளில் நடத்தப்பட்ட கள ஆய்வுகளின் படி (1985-1996), குறைவான எடையுடன் பிறக்கும் (LBW) குழந்தைகளின் விகிதமானது கிராமப்புறத்தை விட அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

பின்னுரையாக என்னுரை:

வாரவிடுமுறையிலும், பிறந்தநாள், திருமணநாள், காதலர் தின கொண்டாட்டங்களின் போதும் நண்பர்களுடனும், குடும்பத்தினர்களுடனும் சீன உணவுகளும், செட்டிநாட்டு உணவுகளும், இத்தாலி (பிட்சா) உணவுகளும் என வகை வகையாக உண்டு களிக்கிறோம். ஆயிரக்கணக்கான பணம் ஒரிரு மணி நேரத்தில் ஏப்பமாகிவிடுகிறது. கேளிக்கைகளும், பனிக்கூழும், பரிசுப்பொருள்களுமாக நாம் வாழ்க்கையை சகல பரிமாணங்களிலும் அனுபவிக்கிறோம். இதனால்தானோ சகமனிதர்களின் துயரங்களைக் காணாதிருக்கிறோம்.

இக்கட்டுரையை எழுதவேண்டி, உரிய ஆவணப்பிரதிகளை படித்துக்கொண்டிருக்கையில் மிகுந்த பதைபதைப்புக்கும், தீவிர மன உளைச்சலுக்கும் ஆளானேன். வாரவிடுமுறையில் நண்பர்களுடன் வெளியில் இரவு உணவுக்காக செல்வது வழக்கம். கடந்த வாரங்களில் தீவிரமான குற்ற உணர்ச்சியோடும், பயத்தோடும், தீவிரமான யோசனைகளுடனும் நிம்மதியற்றவாறே நாட்கள் நகர்ந்தது.

உங்களுக்கு வாய்ப்பிருந்தால் அடுத்த முறை சென்னைக்குச் செல்லும்போது, அதிகாலை நேரத்தில் சேப்பாக்கம் விளையாட்டரங்கத்தைச் சுற்றியுமுள்ள நடைபாதைகளிலும், இரவு நேரங்களில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை நடைபாதைகளிலும், எக்மோரைச் சுற்றியுள்ள சேரிகளின் பக்கம் காலையிலும் ஒரு நடை சென்று பாருங்கள். எங்கிருந்தோ துரத்தப்பட்ட, வெளியேற்றப்பட்ட அல்லது வாழவழியறியாது எங்கிருந்தோ வெளியேறிய மக்களின் துயரங்களைக் காணுங்கள். நம்மிடத்தில், நம் சமூகத்தில் மறைந்திருக்கும் குரூரத்தினை அகக் கண்களால் காணுங்கள். கிராமத்திலிருந்து வந்தவர்கள், சுற்றியுள்ள விவசாய கிராமங்களுக்குச் செல்லுங்கள், அங்குள்ள ஏழை மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வை உற்று நோக்கி ஆய்வு செய்து பாருங்கள். நாம மறைத்துக் கொண்டிருக்கும் அல்லது நம் பிரக்ஞைக்கு எட்டாதிருக்கும் யதார்த்தத்தின் குரூர நடனத்தினைக் காண்பீர்கள். 2003 ம் ஆண்டின் இறுதியில், எனது நண்பனோடு மருத்துவ ஆய்வுகளுக்காக கிராமப் புறங்களில் சுற்றி வந்தபோது காணக்கிடைத்த ஏழ்மையின் தரிசனம் வேதனை மிக்கது.

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

- இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப்பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும் (குறள் 221)

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.

- பிறர்க்கு ஈவதால் குறையக்கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது (குறள் 229)

ஆதலினால் சிந்தியுங்கள்!
உங்கள் சிந்தனையின் தீர்க்கமான ஒப்புதலோடு, சூழலின் தேவைக்குத் தகுந்தாற்போல் ஏதேனும் செய்யுங்கள். உங்களின் ஆற்றலினால் யாரேனும் வறுமையின் வரலாற்றைக் கூட மாற்றிவிடக்கூடும்.

(தொடரும்....)


Thanks
ஆவண ஆதாரங்கள்:

India home to 233 hungry people
http://www.rediff.com/news/2003/aug/07hungry.htm

Food and Agricultural Organization (UN)
http://www.fao.org/es/ess/mdg_kit/pdf/India_e.pdf

Institute for International Economic Studies (Stockholm University)
http://www.iies.su.se/publications/seminarpapers/699.pdf

Frontline (Hindu) - Behind the "shining India"
http://www.frontlineonnet.com/fl2102/stories/20040130000307600.htm

Hindu Business Line
http://www.blonnet.com/2002/12/17/stories/2002121700070800.htm

Child Relief and You (CRY)
http://www.nri-worldwide.com/cgi-local/ts.pl?action=fetch&area=shameofindia&o=5

Tuesday, January 15, 2008

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - பகுதி 2

Hunger in the world of plenty - Part 2

சென்ற பகுதியை படித்துவிட்டு தொடரவும்.

நெடும்பசி (Chronic Hunger)

இன்றைய தேவையானது இன்றே தீர்க்கப்படவேண்டும், நாளைக்கு ஒத்திவைக்க இயலாத, ஒத்திவைக்கக் கூடாத ஒரே பிரச்சினை பசிதான். பட்டினிப் பசியானது நெடிய, கடுமையான, தீவிர பரிமாணங்களைக் கொண்டது. நெடும்பசி ஏற்படுத்தும் சமூகவியல் மாற்றங்கள் மனிதகுலத்தின் மீது தீவிரமான தொடர்ந்த அழிக்க முடியாத பாதிப்புகளை பெரிய அளவில் ஏற்படுத்தக் கூடியது.

பல்வேறு தேசங்களின், ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரப் பிண்ணனியையும், பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் கொண்ட மக்களின் உணவு வகையானது இன்று ஒரே இடத்தில் கிடைக்கக் கூடியதாகவும், வணிகவிருத்தியின் அடையாளமாக உணவுத் திருவிழாக்களும், விதம்விதமாய், பல்வேறு வகையான, ருசியான உணவுகளை தேடித்தேடி வாங்கி உண்ணுவது நாகரீகத்தின் அன்றாடமாகிவிட்ட ஒரு காலத்தில், லட்சக்கணக்கான பணத்தைச் செலவு செய்து விருந்து உபசாரங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், தொடர்புகளும், சாதனங்களும் மிகவும் நவீனமயமாகிவிட்ட ஒரு சூழலில் இன்னும் கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் பசியடக்குவதற்கு உணவில்லாமல், உற்பத்தி செய்ய வழியறியாது, வசதிகளில்லாமல், எல்லோருடைய கவனத்துக்கும் எட்டாது இருக்கிறார்கள் என்பது துரதிருஷ்டமானது. கொடுமையானது.

கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்
காரணங்கள் இவையென்ற அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே
நெஞ்சு பொறுக்குதிலையே ....
(பாரதியார் - நொண்டிச் சிந்து)


இன்னும் துல்லியமாக...
உலகளவிலும், தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் போதுமான, தேவையான உணவுற்பத்தியும், சேமிப்பும் இருந்தும் உணவுத்தேவையுடைய ஏழை மக்களுக்கு அது கிடைப்பதில்லை. உலகின் ஒட்டுமொத்த 640 கோடி மக்களுக்கும் தேவையான உணவு இவ்வுலகில் இருக்கிறது, உற்பத்தி செய்யப்படுகிறது இருந்தும் மக்களில் ஏழில் ஒருவர் பட்டினியாகவே இருக்கிறார். அதில் அதிகம் குழந்தைகள்தான். மூன்றில் ஒரு குழந்தை குறைவான எடையுடையதாக பிறக்கிறது, பின்னர் ஐந்து வயதாவதற்குள் இறக்கிறது. ஏன்? (Hunger in the world of Plenty)

நெடும்பசி நீடித்திருக்க முக்கிய காரணிகளாவன,




இயற்கை:
வெள்ளம், புயல், தட்பவெப்ப மாற்றங்கள், நீண்டகாலமாக பருவமழை பொய்த்துவிட்டதால் ஏற்படும் வறட்சி போன்ற இயற்கையின் காரணிகளால் ஏழை நாடுகளிலும், வளர்ந்துவரும் (??!!) நாடுகளிலும் நெடும்பசி ஏற்படுகிறது. உலகின் தற்போதைய நிலவரத்தின் படி வறட்சிதான் நெடும்பசி ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. 2004 ம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியால் எத்தியோப்பியா, எரித்திரியா, சோமாலியா, உகாண்டா, கென்யா ஆகிய நாடுகளின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நெடும்பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர். எத்தியோப்பியாவிலும், கவுதமாலாவிலும் பருவமழை பொய்த்ததன் விளைவாக சேமிப்பு விதை, விவசாயக் கருவிகளையும் விற்று பட்டினியைப் போக்கிக் கொண்டாலும், தொடர்ச்சியான பஞ்சத்தால் நெடும்பசிக் கொடுமைக்கு தள்ளப்பட்டார்கள்.
நம் அருகிலுள்ள உதாரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்தும், மிகைத்தும், தாமதித்ததின் காரணத்தாலும், காவிரி நீர்ப்பாசன பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களும், துயரங்களும் இன்னும் வெளியில் துல்லியமாய் தெரியவில்லை, அல்லது அரசியல் காரணங்களால் தெரிவிக்கப்படவில்லை.




போர்:
உள்நாட்டுப் போர்களாலும், ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்களாலும், சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியாலும் உணவுப் பொருட்கள் தடுக்கப்பட்டு, உணவு மறுக்கப்பட்டு நெடும்பசிக்கு ஆளாகும் மக்கள் கூட்டம் கொஞ்சமல்ல. ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்கள் தம் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு, சிதறடிக்கப்பட்டு நெடும்பசியின் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த 2004ம் ஆண்டில், உணவுற்பத்திக்கு பஞ்சமில்லாத சூடானின் டர்பூர் பிராந்தியத்திலிருந்து மட்டும் பத்து லட்சம் மக்கள் உள்நாடு ஆயுதக் கலகக்காரர்களால் இடம்பெயர்க்கப்பட்டு, கொடும் பாலைவனத்தில் இப்போதும் ஐ.நாவின் அகதி முகாம்களில் பசியோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். (இன்னும் உதாரணங்கள்: ருவாண்டா, காங்கோ, ஈராக், ....) மேலும் போர் காலங்களில், கலவர காலங்களில் உணவும் ஆயுதமாகிவிடும். கலவரக்காரர்களாலோ, ராணுவத்தினராலோ உணவு சேமிப்புக் கிடங்கும், விநியோக ஏற்பாடுகளும், சந்தைப் பகுதிகளும் தடுக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டு கத்தியின்றி, ரத்தமின்றி, கத்தக் கூட திராணியின்றி பட்டினியால் மக்கள் அழித்தொழிக்கப்படுவார்கள். விவசாய நிலங்களிலும், பாசனக் கிணறுகளும், ஏரிகளும் அழிக்கப்பட்டு அல்லது கன்னி வெடி புதைக்கப்பட்டும் அப்பிராந்தியத்தின் நெடும்பசிக்கு ஏற்பாடு செய்யப்படும் . அமைதியான பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களும் இதன் தொடர்ச்சியாக பாதிக்கப் படுவார்கள் (கானா, மலாவி..).



அரசின் பொருளாதாரக் கொள்கை
நவீன உலகில் அப்பாவி மக்கள் மீதான சகிக்க முடியாத, ஏகாதிபத்திய வன்முறையில் ஒன்றான பொருளாதாரத் தடையாலும், மக்களின் தேவையை கருத்தில் கொள்ளாமல், ஆராயாமல் அமலாக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால், தோல்வியைத் தழுவிய பொருளாதாரக் கொள்கைகளால் நெடும்பசிக்கு ஆளாகும் மக்கள் கூட்டமும் கொஞ்சமல்ல. (அர்ஜெண்டினா, ஈராக், இந்தியா)




ஏழ்மை:
விதைப்பதற்காக வைத்திருக்கும் நெல்லைக் கூட விற்றுத் தின்னும் அளவுக்கு வறுமை, பசி, குடும்பத்தினரின் பட்டினியோடு அல்லாடிக் கொண்டிருக்கும் ஓர் அப்பாவி ஏழை விவசாயி இயற்கையும், சமூகமும், அரசும், அரசியலும், அக்கம் பக்கமும் ஏமாற்றிவிட என்ன செய்வான் நெடும் பசிக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதைத் தவிர? நவீன விவசாய உபகரணங்களையோ, புதிய தொழில்னுட்பத்தையோ வாங்க வழியற்றவர்களால் எப்படி எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியும்? இன்னும் நிலமற்றவர்கள், நீர்ப்பாசன வசதியற்ற பகுதிகளில் இருக்கும் விவசாயக் கூலிகள், தொழில் நுட்ப அறிவற்ற ஏழைகள் என்ன செய்ய முடியும், கிடைக்கும் கூலிக்கு உண்டு உயிர்காக்க போராடிக் கொண்டிருப்பதைத் தவிர? ஏழ்மையில் சிக்கித் தவிக்கும் மக்கள் அவர்களுக்கான உணவையோ, குடும்பத்திற்கான உணவையோ வாங்கும் அல்லது உற்பத்தி செய்து கொள்ளும் திறனை இழந்துவிடுகிறார்கள். பட்டினியின் காரணமாக மேலும் மேலும் பலமிழந்து, நலமிழந்து நோய்வாய்ப்படுகிறார்கள். சுருக்கமாக, ஏழைகள் பட்டினிக்கு ஆளாகிறார்கள், அவர்களது ஏழ்மை மீண்டும் அவர்களை ஏழ்மைக்குள் தள்ளுகிறது.


தொடரும்....

Tuesday, January 8, 2008

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்


Hunger in the World of plenty



உணவு:
உயிரினங்களின் அத்தியாவசியத் தேவைகளில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும். உடலின் எரிபொருள். எல்லா உயிரினங்களின் வாழ்விலும் நலனிலும் பெரும்பங்கு வகிப்பது; மனிதகுலத்தின் எல்லா ஏற்றங்களுக்கும் காரணமாகவும், நலவாழ்விலும், சமூக நல்லிணக்கத்திற்கும் காரணமாக இருப்பது, மனிதனை உருவாக்குவது அவன் உருவம், உயரம், அழகு, உள்ளம் யாவற்றையும் உருவாக்கவும் மாற்றவும் வல்லது. நலத்தையும், பலத்தையும் தரவல்லது மக்கட் பிறப்பை பெருக்குவதிலும், கட்டுப்படுத்துவதிலும் இது ஆற்றும் பங்கு மிகப்பெரிது. உள்ளத்தின் உயர்வையும் உடலின் திறனையும் பெருக்க வல்லது. மனித நாகரீகத்திலும் பண்பாட்டிலும் இது பெரும் பங்கு வகிக்கிறது.

பசி என்பது என்ன?

உணவின் தேவையை உணர்த்தும் ஏற்பாடு. உடலியக்கத்தின் ஆதார எரிபொருள் தேவைக்கான சமிக்கை. சக்தி தேவையின் பொருட்டு உடனே உண்ணச் சொல்லும் உடலின்/உள்ளுணர்வின் உந்துதல், உண்ணாமல் இருக்கும் போது நம்மால் (மூளையால், மனத்தால், உடலால்) உணரப்படுவது. மேலும் உணவு தவிர்த்து வேறு வகையான உணர்வுகளுக்காகவும், ஆசைகளுக்காகவும் ஏங்குவது. (காதல், இலட்சியம், காமம், புகழ்....இன்னும் பிற) என்றும் அறியப்படும்
ஏதேன் தோட்டத்தில்
ஏவாள் இல்லாமல் கூட
ஆதாம் வாழ்ந்திருக்க முடியும்
ஆனால் ஆப்பிள் இல்லாமல்
ஒரு நாள்கூட
உயிரோடிருந்திருக்க முடியாது

ஜென் கதையொன்று...
ஆற்றின் இரண்டு கரைகளில் இரு துறவிகள் இருந்தனர். வலதுபுறமிருந்த கரையிலிருந்த துறவி தண்ணீரில் நடந்து காட்டக் கூடியவர். காற்றில் எழுதிக்காட்டக் கூடியவர். இடது புறமிருந்த துறவிக்கு இது போன்ற சித்துகளும் எதுவும் தெரியாது அதனால் அவரிடம் சீடர்கள் வந்து சேர்வது கிடையாது. ஒரு நாள் புதிதாக ஒரு மாணவன் அவரிடம் வந்து சேர்ந்தான். அவன் ஆர்வத்துடன் நீங்கள் ஏன் மாயங்கள் செய்வதில்லை என்று கேட்டான். அதற்கு இடதுபுறமிருந்த துறவி தான் செய்யும் மாயங்களை மற்றவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். உனக்காவது புரிகிறதா பார்ப்போம் என்றபடி. எனக்கு பசியெடுத்தால் சாப்பிடுகிறேன். சாப்பிட்டதும் பசி எங்கே போனது என்று மாயமாகயிருக்கிறது. அது போலவே தாகமாகயிருக்கும் போது தண்ணீர் குடிக்கிறேன். தாகம் எங்கே மறைந்தது என்றே தெரியவில்லை. இவை யாவையும் விட பெரிய மாயம். உறக்கம் வந்த போது நான் உறங்கிப் போய்விடுகிறேன் இந்த மொத்த உலகமே எனக்குத் தெரியாமல் மறைந்துவிடுகிறது. இதெல்லாம் மாயமில்லையா என்று கேட்டார். சீடனுக்கு அவரது அருமை புரிந்து அவரிடத்தில் தங்கிவிடுகிறான்.

(எல்லா இறைதூதர்களும் பசியைப் போக்குவதை தான் முதன்மையான அற்புதமாக நிகழ்த்தியிருக்கிறார்கள். பசியைப் பற்றி பேசாத மதமேயில்லை. பத்து பேர் உண்ணும் அப்பத்தை நூறு பேருக்கு பங்கிட்டு கொடுத்ததும். விருந்தில் தண்ணீரை திராட்சை ரசமாக்கியதும் கிறிஸ்துவின் அற்புதங்கள் என்றால் அதனடியில் பசியுணர்ச்சி தான் பிரதானமாகயிருந்திருப்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது. தனக்கு கிடைப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பது ஜீவராசிகள் யாவற்றிருக்கும் பொதுவான வழிமுறை. நிலத்தடியில் ஒடும் தண்ணீரை ஒரேயொரு வேப்பமரம் மட்டும் உறிஞ்சிக் குடித்துக் கொள்வதில்லை. காகம் கைப்பிடி சாதத்தைக் கூட கரைந்து காகங்களை அழைத்துத் தான் சாப்பிடுகிறது. இப்போதும் நாம் நமது பிறந்த நாள். திருமண நாட்களில் மிகச் சிறப்பாக நினைப்பது விருந்தை மட்டும் தான். நல்ல உணவளிப்பது தான் நமது அன்பின் பிரதான வெளிப்பாடாகயிருக்கிறது. ஆயிரம் வார்த்தைகளை விடவும் ஒரு பிடி சோறு அதிக நெருக்கம் உண்டாக்கிவிடக்கூடியது. ஒரு கலாச்சாரத்தை தீர்மானிப்பதில் முக்கியபங்கு வகிப்பது உணவு தான். உணவின் சரித்திரத்தை ஆராயும் போது நாகரீகத்தின் மறுபக்கத்தை அறிய முடிகிறது - எஸ்.ராமகிருஷ்ணன், தீராப்பசி)

பொதுவாக பசியென்றால் சாப்பிடனும் என்றோ, இன்னும் சாப்பிடவில்லையே என்பது மட்டுமே நம் நினைவுக்கு வரும். இதற்கப்பாலும் பல கூறுகள் பசியில் உண்டென்பதை பெரும்பாலோர் அறியமாட்டார்கள். பசி என்பது பல்வேறு தன்மைகளையும், தேவைகளையும் உடையது. மருத்துவத்துறையினராலும், சமூகவியல் ஆய்வாளர்களாலும் கீழ்க்கண்டவாறு பட்டியலிடப்படும்.
1) கடும்பசி (Acute Hunger)
2) நெடும்பசி (Chronic Hunger)
3) தனிப்பசி (Specific Hunger)
4) சமச்சீர் உணவுப்பசி (Multiple Hunger)
5) ஊட்டச்சத்துப் பசி (Mal Nutritional Hunger)
இப்படிப்பட்ட பசி நிலைகளால் உலகில் வாடுவோர் 75% உள்ளனர். இந்தியாவில் மட்டும் 90% மக்கள் (அனைத்துவகை) பசிகளுக்கு அடிமையாய் உள்ளனர்.
1) கடும்பசி (Acute Hunger)
உயிர் வாழ இப்பசியை அடக்குதல் வேண்டும். அன்றாடம் உணவு தேவைப்படும் அத்தியாவசியத்தை உணர்த்தும் பசி. உணவு அளவில் குறையும்போது ஆற்றல் குறைந்து எதுவும் செய்யமுடியாமல் ஒடுங்கும் நிலை ஏற்படுகிறது. இதைத்தான் பாரதி சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறுஞ்சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம் என்றான். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றும் குறிப்பிட்டது இப்பசியைத்தான். கூழோ, கஞ்சியோ, ஹம்பர்கரோ, வளர்க்கும் குரங்கையோ*, எதையாவது...எதையாவது தின்று அடக்கவேண்டிய பசி.
* 7 ஆண்டுகளுக்கு முன்பு உத்திரப்பிரதேச மாநிலத்தில் கிராமப்புறங்களில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் காரணமாக, கிராம மக்களில் பெரியவர் ஒருவர் தான் வளர்த்த குரங்கைக் கொன்று தின்று விட்டார் என்றும், இன்னும் சிலர் விஷத்தன்மை வாய்ந்தது என்று தெரிந்தும் ஒருவகைக் கிழங்கை வேறுவழியின்றி உண்டு சில நாட்களில் இறந்திருக்கிறார்கள் என்றும் இந்தியா டுடே இதழில் வந்த கட்டுரையில் படித்தேன்.



2) நெடும்பசி (Chronic Hunger)

பஞ்சத்தினாலும், இயற்கையின் சீற்றங்களாலும், ஏமாற்றங்களாலும், உணவுற்பத்திக்கு தேவையான அத்தியாவசிய கட்டமைப்பின் குறைவினாலும், சமூக அமைப்பின் சுரண்டல்களாலும், போர், அகதியாக்கப்படுதல் போன்ற சமூகப்பிரச்சினைகளாலும் நீண்டகாலமாக நிர்ப்பந்தமான பட்டினியால் ஏற்படும் பசி.
WHO வின் 2004ம் ஆண்டறிக்கையின் படி, ஒவ்வொரு நாளும் , 800 மில்லியன் மக்கள் பசியோடு உறங்குகிறார்கள், நீண்டகாலமாக நிர்ப்பந்தமான சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு பருவகால மாற்றத்தின் போதும் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால் வாடுகிறார்கள். பசியாலும், ஊட்டச்சத்துக் குறைவாலும் ஏற்படும் நேரிடையான அல்லது மறைமுகமான பாதிப்பால் ஒவ்வொரு வருடமும் 7 மில்லியன் குழந்தைகள் 5 வயதை அடையுமுன்பே மரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் ஒருமணி நேரத்தில் உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் சராசரியாக 8,300 பேர் சேர்ந்து கொள்வார்கள். நாளை இந்நேரம் இன்னும் 2 லட்சம்பேருக்கு உணவு தேவைப்படும். இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அதன் தனிதன்மையான தேவைகளோடு இருப்பவர்கள்தாம், இவ்வுலகின் பிரஜையாக இருப்பதற்கு நம்மைப் போலவே எல்லா அடிப்படை உரிமைகளும், அத்தியாவசிய தேவைகளும் உடையவர்கள்தாம். ஆனால், பரிதாபம் முறைகெட்ட சமூக அமைப்பாலும், அவர்களின் அத்தியாவசிய வாழ்வாதாரங்களைப் பகிர்ந்தளிக்காத சுரண்டல் மிகுந்த, ஏற்றத்தாழ்வுமிக்க வாழ்வமைப்பாலும் நிராகரிக்கப்பட்டவர்களாக செத்து மடிகிறார்கள். உலகின் வளங்களை எல்லாம் வெறும் இரண்டு விழுக்காட்டினர் சுயநலம் மிகுந்த அரசியல், சமூகப்பொருளாதார கட்டமைப்பால் பயன்படுத்திக் கொண்டு, மீதமுள்ள 98 % மக்களை ஏதேனும் குறையுள்ளவர்களாக விட்டுவிட்டனர்.



உணவுசார் தேவைகளை மதிப்பீடு செய்யும் உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) வல்லுனர்களின் அறிக்கைகளின் படி, ஒவ்வொரு ஆண்டும் 73 மில்லியன் மக்கள் இப்புவியில் மக்கட்தொகையில் இணைந்து கொள்கிறார்கள். அனைவருக்கும் தேவையான உணவுற்பத்தி நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது, ஆனால் பெரும்பான்மையான, தேவையுள்ள (சுமார் 850 மில்லியன்) மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை என்பது நிதர்சனமான, வருத்தத்திற்குறிய உண்மை. இதில் 95 விழுக்காட்டினர் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் உபரியான உணவுப்பொருட்கள் வளர்ந்து வரும் நாடுகளின் உணவுத்தேவையுள்ள பெரும்பான்மை மக்களுக்கு சென்று சேரும் ஏற்பாடுகள் இன்னும் சரிவரச் செய்யப்படவில்லை. குறிப்பாக இந்தியாவில் மட்டும் வறுமைக்கோட்டின் கீழ் 46 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
பசி மனித வாழ்வைச் சீர்குலைக்கிறது. மனித வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே இது தன் ஆதிக்கத்தைத் தொடங்கியுள்ளது. தன்னலமும், சுரண்டலும் இதை வளர்த்தன.
நெடும்பசியானது மனித இயல்பைச் சிதைக்கும், வலிமையைக் குறைக்கும். பசியினால் எழும் உணவு வேட்கையால் மனிதன் தன்னை மறந்து எதையும் செய்யத்துணிவான். இதனால் அன்பு, அறம், கடமை, பண்பாடு போன்றவற்றை இழக்கவும் யோசிக்கமாட்டான். கொலை, களவு, பூசல், சோம்பல், சோரம்போதல் ஆகிய அனைத்திற்கும் இப்பசியே அடிப்படை. பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும் என்று இதையே குறிப்பிட்டனர்.

(பசி தான் மனிதனின் சகலகுரோதங்களுக்கும் மூலவேர். பசியோடிருப்பவன் எந்த நியாயத்திற்கும் கட்டுப்படமாட்டான். குற்றவாளிகளுக்கு கூட வேளைக்குவேளை சரியாக உணவு வழங்கப்படுகிறது. நம் உடல் தான் நமக்கிருக்கும் ஒரே சாதனம். மனிதன் இருவகைப் பசியால் பீடிக்கப்பட்டிருக்கிறான். உடல் தன்னை வளர்த்துக்கொள்வதற்கு வயிற்றுப் பசியை உருவாக்குகிறது. இன்னொன்று தன்னை போல இன்னொரு உடலை உற்பத்தி செய்வதற்கு காமத்தை இரண்டாம் பசியாக உருவாக்குகிறது. பசியோடு இருப்பவன் காமத்தை விடவும் வயிற்றை நிரப்புவதில் தான் அதிக நாட்டம் கொள்வான் - எஸ்.ராமகிருஷ்ணன், தீராப்பசி)
(தொடரும்...)

நன்றி:
மருத்துவ ஆசான் ஐயா த.ச.ராசாமணி, மதுரை
மனிதனை நலமாக்குவது ஹோமியோபதி - மாத இதழ், மதுரை
(ஜென் கதையும், அடைப்புக்குறிக்குள் இருக்கும் பத்திகளும் - எஸ்.ராமகிருஷ்ணனின் தீராப்பசி கட்டுரையிலிருந்து - அட்சரம்)
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் - அட்சரம், காலாண்டிதழ்
புள்ளிவிபரங்கள்:
http://www.who.org (World Health Organization)
http://www.wfp.org (World Food program)
http://www.bread.org (Bread for the world)
http://www.fao.org/es/ess/mdg_kit/pdf/India_e.pdf Food and Agricultural Organization (UN)
http://www.iies.su.se/publications/seminarpapers/699.pdf Institute for International Economic Studies (Stockholm University
www.google.com search engine ("hunger facts")
_______________________
பின்னுரையாக.....
சமீபகால பத்திரிக்கைச் செய்திகளும், தொலைக்காட்சி ஆவணப்படங்களும் உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நீண்டகால பட்டினியால் வாடும் மக்கள் கூட்டத்தை நம் கவனத்துக்கு கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் கூட காவிரிப் பாசனப் பகுதியில் வாழும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, உண்ணுவதற்கு வழியறியாமல், குடும்பத்தின் பசியை போக்க வழியறியாதவர்களாகவும், கடன் தொல்லைகளாலும் தற்கொலை செய்து கொண்டு மாண்டு கொண்டிருக்கிறார்கள் எனும் செய்தி வந்தவண்ணமிருக்கிறது.

பிச்சைக்காரர்களுக்கு உணவளித்தால், உதவி செய்தால் உழைக்காத ஒரு கூட்டத்தை உற்பத்தி செய்துவிடுவோம் என்று முற்போக்காய் எண்ணிக்கொள்கிறோம். மேற்கோள் காட்டுகிறோம், புள்ளிவிபரங்கள் சேகரிக்கிறோம். இப்படித்தான் அவனுக்கு பாவப்பட்டு சோறு வாங்கிக் கொடுத்தேன், அவன் என்னடான்னா என் பர்சை அடிச்சிக்கிட்டு போய்ட்டான்" உதாரணக் கதை சொல்கிறோம்.

இரக்கமற்று நீளும் வறுமையின் கரத்தை ஒடுக்காதவரை நாம் ஒருபோதும் சமதர்ம, சமத்துவ, அமைதியான ஒரு சமூக வாழ்வை கற்பனையில் மட்டும்தான் காணவேண்டி வரும். ஒருவேளை கற்பனையில் கூட காண முடியாத சமூகச் சூழல் வெகுவிரைவில் வரலாம்.
நம் தமிழ்ப்பாட்டனார் வள்ளுவரின் குறள் மொழிகளிலிருந்து,
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது (227)
-பட்டினி எனச்சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண்போகாது. தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக் கூடிய கருவூலமாகும்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (226)

-பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைபிடிப்பதைவிட பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை (322)
-இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழவேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது எதுவுமே இல்லை.

எல்லோருக்கும் அவரவர் விருப்பம் போல் வாழவேண்டும் என்று ஆசை இருக்கிறது, எங்கேனும் சமூகத்தில் நம் அமைதியான வாழ்விற்கு பங்கம் விளைவிக்கும் ஏதாவதொன்று நடந்தால் எல்லோரும் ஒவ்வொரு மற்றவரை குற்றம் சொல்கிறோம், விவாதம் செய்கிறோம், மனதின் கோபங்களை, ஆத்திரங்களை, சமூக விமரிசனங்களை, குமுறலை, கவிதையில், எழுத்தில் பதிவு செய்கிறோம். அத்தோடு நம் கடமை முடிந்துவிட்டதா???
சமூகப்பாத்திரத்தில் நமக்கான இடத்தை மனசாட்சியின் ஒப்புதலோடு, சம்மதத்தோடு குறைந்தபட்ச நேர்மையோடு நிறைவாக்கிவிட்டோமா?
நமக்கெல்லாம் உறைக்கவேண்டும் என்பதற்காக,
வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கும் வாழும் மனிதர்க்கெல்லாம்....
- என்று பட்டினிப் பசியின் கொடுமையை அனுபவித்து உணர்ந்த பாரதி எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறான்.
நாம் உண்மையில் என்ன செய்கிறோம்? நாம் பட்டினியின்றி சுகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதனால்தான்...

- சிவாஜி 200 கோடிக்கு விற்பனையானதைப் பற்றிச் சிலாகித்துக் கொண்டிருக்கிறோம்.
- நயந்தாராவின் இடுப்பில் சதை வைத்துவிட்டது நமக்கு கவலையாய் இருக்கிறது
- ......................................

இன்னும் .................. நிறைய சொல்லலாம்
நாம் பாரதியை மட்டுமல்ல, காந்தியை மட்டுமல்ல, வள்ளுவரை, புத்தரை, ஏசுவை, நபியை இன்னும் என்னெவெல்லாமோ படிக்கிறோம். சிந்திக்கிறோம் அல்லது அப்படி எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏதேனும் செய்கிறோமா? சிந்திக்க வேண்டும், உண்மையாய் சிந்திக்க வேண்டும். ஏதேனும் செய்யவேண்டும்.

Another Animal

வணக்கம்

பால்ய காலந்தொட்டே, இன்னெதென்று வகைப்படுத்திச் சொல்லத் தெரியாத உணர்வொன்று எதை நோக்கியோ உந்திக்கொண்டே இருந்தது. அது காதலா, நேசத்திற்கான ஏக்கமா, சராசரியான தேவைகளின் ஆசைகளா என்னவென்று சுட்டிச் சொல்லிவிடமுடியவில்லை. அப்படித்தான் எண்ணத்தில் வருவதையெல்லாம் எழுதவேண்டும் என்ற எண்ணமும். காதல், நேசம் என்பது பரிணமிக்கக் கூடியது, காதல் என்பது பெண்களைத் தாண்டியும் வேறொன்றாக உருமாற்றம் அடையக்கூடியது என்பதை மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டோம். அல்லது அப்படி ஏற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களையும், அனுபவங்களையும் வாழ்க்கை காலத்தின் இலையில் பரிமாறியது. பெண்கள் மீதும், காதல் சார்ந்த உணர்வுகள், பாடல்கள், எழுத்துக்கள் மீதுமிருந்த சாய்வு மனிதர்களின் மேல் ஏற்பட்டது. கட்டுப்படுத்த முடியாத காதலை தோலுரித்து சமூகத்தின் மீதான அக்கறையாய், மனித குலத்தின் மீதான மங்காத நேசமாய், பரிவாய் மாற்றிக் கொண்டது எதையோ அறிந்து கொண்ட நுட்பமான மனம்.

பொது அறிவாகட்டும், மருத்துவ அறிவாகட்டும், இலக்கிய அறிவாகட்டும் இன்னும் எல்லாவற்றிலும் நான் என்னளவில் குறைபாடுடைய, ஆனால் மேலும் மேலும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆவலுடைய உயிரிதான்.

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சமூகம் சார்ந்த கருத்தியலில் என் பார்வை படிந்த, என் புரிதல் சார்ந்த நடைதான் இருக்கும். பொதுநன்மை கருதிய விமரிசனங்களை உடனுக்குடன் ஏற்றுக்கொள்வோம்.

பரந்த ஊடக உலகில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு வகையான அமைப்பு, அரசு, இயக்கங்களின் திரட்டல்களிலிருந்து பயன்படுத்தப்பட்டிருக்கும் புள்ளிவிபரங்கள் சார்ந்த விமரிசனங்களுக்கு நான் மட்டுமே முழுப் பொறுப்பு ஏற்கமுடியாது. தார்மீக அடிப்படையில் தவறான தகவல்களுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம். திருத்திக் கொள்ளலாம்.

பெரும்பான்மை வகிக்கும் ஆதிக்க கருத்தியலை, நவீன மருத்துவ நடைமுறைகளை, வலிமையான ஊடக சக்தியால் நம்மீது திணிக்கப்பட்ட மருத்துவம் சார்ந்த பிரமைகளை, மூன்றாவது கோணத்தில் உடைக்கும் ஏற்பாட்டுக்கான சிறுமுயற்சிதான் இது.

உடல், நலம், ஆரோக்கியம், நோயியல், நோய் நீக்குதல், உணவு, உடற்கூறு ஆகியன பற்றிய மாற்றுமருத்துவம் (ஹோமியோ, அக்குபஞ்சர்) முன்வைக்கும் கருத்துக்களையும், நடைமுறைகளையும், பயிற்சிகளையும், ஆலோசனைகளையும், தொகுத்து எழுதவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் எழுதப்படுகிறது.

எந்த ஒரு சித்தாந்தத்தையோ, கருத்தையோ, முடிவையோ வலியத் திணிப்பதற்காக எழுதப்படவில்லை. மாறாக, மக்களின் பக்கம் உங்களின் கவன ஈர்ப்புக்காகவும், உங்களின் நலனுக்காகவும், சமூக ஆரோக்கியத்திற்காகவும் தான்.

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்
வேறொன்றுமறியேன் பராபரமே"

Tuesday, January 1, 2008

தீராப்பசி - எஸ்.ராமகிருஷ்ணன்

நன்றி:
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (அட்சரம்)
http://www.tamiloviam.com

http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=30&fldrID=1
நாள் : 8/19/2004 12:30:55 PM


தீராப்பசி - எஸ்.ராமகிருஷ்ணன்

வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினைக் காண்பதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னால் நெய்வேலியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வடலூருக்குச் சென்றிருந்தேன். வடலூர் இப்போதும் மிகச்சிறிய ஊராகவேயிருக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன்னால் நிச்சயம் மிகக் குக்கிராமங்களில் ஒன்றாக இருந்திருக்க கூடும். வள்ளலார் எதற்காக இந்த ஊரை தனது சத்திய ஞான சபையை உருவாக்குவதற்கு தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. காலம் மாறியபோதும் அந்த ஊரும் மக்களும் அப்படியேயிருக்கிறார்கள். செம்மண் புழுதி படிந்த சாலையின் தொலைவிலே பால் வெண்மையில் தெரிகிறது எண்கோணவடிவத்தில் அமைந்த சமரச சன்மார்க்க சங்கத்தின் கட்டிடம். அருகில் சென்று பார்க்கும் போது இப்போதும் அதன் புத்துரு மங்காமல் அப்படியே இருக்கின்றது. வள்ளலாரே வடிவமைத்துக் கட்டிய கட்டிடமது. அதன் வழுவழுப்பான சுவர்களைத் தடவிப்பார்க்கும் போது நேர்த்தியும் உறுதியையும் உணரமுடிகிறது.

நான் வந்த வழியெங்கும் எங்கிருந்தோ சாதுக்களும் பண்டாரங்களும் மெலிந்த உடலோடு மெதுவாக நடந்து வந்தபடியிருந்தார்கள். பெரிய மைதானமும் ஒன்றிரண்டு வீடுகளையும் தவிர அந்தப்பகுதியில் பெரிய கட்டிடங்கள் எதுவுமில்லை. அந்தப் பகுதியை சுற்றிலும் பல்வேறு ஊர்களில் உள்ள வள்ளலாரின் சபைக்குரிய அன்னதானச் சத்திரங்களும் அதற்குரிய அலுவலகங்களும் காணப்படுகின்றன.

வள்ளலாரின் திருஅருட்பாவை வாசித்த நாட்களில் அதன் கவித்துவமும் உள்ளார்ந்த அன்பும் அக்கவிதைகளை மனதில் ஆழ்ந்து வேரோடச் செய்திருந்தது. சமீபமாக அவரது உரைநடைகளையும் கடிதங்களையும் வாசித்ததும் வடலூரின் சத்திய ஞான சபையைக் கண்டு வரவேண்டும் என்று தோணியது. பலவருடங்களுக்கு முன்பாக பார்த்திருக்கிறேன். ஆனாலும் நினைவில் அதிகம் தங்கவில்லை.

வள்ளலாரின் எண்ணமும் செயல்பாடும் காலத்தை முன்னுணர்ந்து செயல்பட்டது போலிருக்கின்றது. எந்த தேசத்தில் வாழ்ந்த போதும் மனிதனின் தீராப் பிரச்சனை பசி தான். மனிதவாழ்வின் உந்துதல் பசி. அது தான் மனிதனை வேலையைத் தேடிக்கொள்ளச் செய்கிறது. குடும்பத்தை அமைந்துக் கொள்கிறது. குழந்தைகளின் பசியை போக்குவது தான் பெற்றவனின் முதன்மையான கடமை. அது போலவே பசியைப் போக்குவது தான் அறத்தின் உயர்நிலை. தமிழில் பசியை பிணி என்கிறார். எத்தனை நிஜமான சொல்லது. பசிப்பிணியை போக்குவதற்காக அமுதசுரபியை ஏந்திப் புறப்படுகிறாள் மணிமேகலை. பசிப்பிணியை வெல்வது எளிதானதில்லை

ஜென்கதைகளில் ஒன்றிருக்கிறது. ஆற்றின் இரண்டு கரைகளில் இரு துறவிகள் இருந்தனர். வலதுபுறமிருந்த கரையிலிருந்த துறவி தண்ணீரில் நடந்து காட்டக் கூடியவர். காற்றில் எழுதிக்காட்டக் கூடியவர். இடது புறமிருந்த துறவிக்கு இது போன்ற சித்துகளும் எதுவும் தெரியாது அதனால் அவரிடம் சீடர்கள் வந்து சேர்வது கிடையாது. ஒரு நாள் புதிதாக ஒரு மாணவன் அவரிடம் வந்து சேர்ந்தான். அவன் ஆர்வத்துடன் நீங்கள் ஏன் மாயங்கள் செய்வதில்லை என்று கேட்டான். அதற்கு இடதுபுறமிருந்த துறவி தான் செய்யும் மாயங்களை மற்றவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். உனக்காவது புரிகிறதா பார்ப்போம் என்றபடி. எனக்கு பசியெடுத்தால் சாப்பிடுகிறேன். சாப்பிட்டதும் பசி எங்கே போனது என்று மாயமாகயிருக்கிறது. அது போலவே தாகமாகயிருக்கும் போது தண்ணீர் குடிக்கிறேன். தாகம் எங்கே மறைந்தது என்றே தெரியவில்லை. இவை யாவையும் விட பெரிய மாயம். உறக்கம் வந்த போது நான் உறங்கிப் போய்விடுகிறேன் இந்த மொத்த உலகமே எனக்குத் தெரியாமல் மறைந்துவிடுகிறது. .இதெல்லாம் மாயமில்லையா என்று கேட்டார். சீடனுக்கு அவரது அருமை புரிந்து அவரிடத்தில் தங்கிவிடுகிறான்.

பசி தான் மனிதனின் சகலகுரோதங்களுக்கும் மூலவேர். பசியோடிருப்பவன் எந்த நியாயத்திற்கும் கட்டுப்படமாட்டான். குற்றவாளிகளுக்கு கூட வேளைக்குவேளை சரியாக உணவு வழங்கப்படுகிறது. நம் உடல் தான் நமக்கிருக்கும் ஒரே சாதனம். மனிதன் இருவகைப் பசியால் பீடிக்கப்பட்டிருக்கிறான். உடல் தன்னை வளர்த்துக்கொள்வதற்கு வயிற்றுப் பசியை உருவாக்குகிறது. இன்னொன்று தன்னை போல இன்னொரு உடலை உற்பத்தி செய்வதற்கு காமத்தை இரண்டாம் பசியாக உருவாக்குகிறது. பசியோடு இருப்பவன் காமத்தை விடவும் வயிற்றை நிரப்புவதில் தான் அதிக நாட்டம் கொள்வான்.

எல்லா இறைதூதர்களும் பசியைப் போக்குவதை தான் முதன்மையான அற்புதமாக நிகழ்த்தியிருக்கிறார்கள். பசியைப் பற்றி பேசாத மதமேயில்லை. பத்து பேர் உண்ணும் அப்பத்தை நூறு பேருக்கு பங்கிட்டு கொடுத்ததும். விருந்தில் தண்ணீரை திராட்சை ரசமாக்கியதும் கிறிஸ்துவின் அற்புதங்கள் என்றால் அதனடியில் பசியுணர்ச்சி தான் பிரதானமாகயிருந்திருப்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது.

வள்ளலார் கவிஞரா? ஆன்மீகவழிகாட்டியா? ரசவாதியா? சைவ சித்தாந்தத்திற்கு புத்துணர்வு தந்தவரா? அன்பின் வழியாக புதிய மெய்வழியை உருவாக்கியவரா? இப்படி அவருக்கு பலமுகங்களிருக்கின்றன. அவரது செயல்பாடுகள் யாவிலும் ஒன்றென கலந்திருப்பது மனித வாழ்வின் மீது அவர் கொண்டிருந்த அக்கறை. அதற்கு வழிகாட்டும் அன்பு
திருஅருட்பா எழுதி அன்பை தன் கவிதைகளில் வெளிப்படுத்தியதோடு நின்றுவிடாமல் பசிப்பிணியை போக்குவதற்காக தர்மசாலைகளை நிறுவியிருக்கிறார். 1867 ல்துவங்கி இன்று வரை அந்த தருமசாலையின் அடுப்பு எரிந்து கொண்டேயிருக்கிறது.

வடலூரிலுள்ள அணையாத அடுப்பின் முன்பாக போய் நின்று கொண்டிருந்தேன். நெருப்பின் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. கரும்புகை படிந்த சுவர்கள். பழமையான கிணறு. நாலைந்து பாத்திரங்களை ஏற்றியிறக்கும் நீண்ட அடுப்பு. அங்கே விறகுகளை தான் அடுப்புக்கு பயன்படுத்துகிறார்கள். இரவில் நெருப்பு குறைக்கபட்டு சிறிய தணலாக்கி மறுநாள் காலையில் தயாரிக்கப் போகும் கஞ்சிக்காக வெந்நீர் கொதிக்கவிட்டுவிடுவார்களாம். நான் சென்றிருந்த மதிய வேளையில் உணவு தயாராகிக் கொண்டிருந்தது.

சமையற்கூடத்திலிருந்த தணலைக் காணும் போது நெருப்பு ஒரு கருணை என்றே புரிகிறது. மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்தது தான் அவனது இத்தனை வளர்ச்சிக்கும் அடிப்படை. ஆனால் இன்றைக்கும் நெருப்பைத் தன் வசத்தில் கட்டுபடுத்தி வைக்க மனிதனுக்குத் தெரியவில்லை. இரவும்பகலும் அணையாமல் எரியும் அந்த அடுப்பின் வழியாக தினமும் காலையில். மாலையில் முந்நூறுக்கும் மேற்பட்டவர்களும். மதியம் ஆயிரம் பேரும் உணவு உண்கிறார்கள். அன்னதானம் தானே என்று ஏதோவொரு சாப்பாடு கிடையாது. வடையும் பாயாசமும் அப்பளமும் பொறியலும் ரசமும் சாம்பாரும் கொண்ட முழுமையான சாப்பாடு. சாப்பிடவருபவர்களை யாரும் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்பதில்லை. சாப்பாட்டைப் பரிமாறுபவர்கள் குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டுவது போல அத்தனை கரிசனத்துடன் உணவு தருகிறார்கள். சாதுக்களும் சந்நியாசிகளும் மட்டுமல்ல வெளியூரிலிருந்து வந்தவர்கள். முதியவர்கள். வறுமையால் அங்கேயே தங்கியிருப்பவர்கள் என பலரும் உணவு உண்ண வருகிறார்கள்

தனிநபர்களின் உதவியாலும் தீவிரமான ஈடுபாட்டாலும் மட்டுமே சாத்தியமாகயிருக்கும் அதிசயமிது. உலகமெங்கும் பல்வேறு மதநிறுவனங்கள் உணவளிக்கின்றன. அதன் பின்னால் ஏதாவது ஒரு காரணமிருக்ககூடும். குறைந்த பட்சம் அவர்கள் இறை நம்பிக்கையை ஏற்றுக்கொள்பவர்களாகயிருக்க வேண்டும் என்றாவது கட்டாயமிருக்கிறது. ஆனால் வள்ளலாரின் சபையில் அப்படி எந்தக் கட்டாயமும் இல்லை. மனிதர்கள் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்றால் பசியில்லாமல் இருக்கவேண்டும் என்று மட்டுமே வலியுறுத்தபடுகிறது.

அந்த சமையல்புரையில் நின்றுகொண்டேயிருந்தேன். வள்ளலார் காலத்தில் எந்த இடத்தில் உணவு தயாரிக்கபட்டதோ. அளிக்கப்பட்டதோ அதே இடத்தில் தற்போதும் உணவளிக்கபடுகிறது. மரப்பலகையில் சாதம் வடித்து கொட்டப்பட்டிருக்கிறது. அதன் மணம் அறையெங்கும் நிரம்பியுள்ளது. சமையற்கூடத்தில் பணியாற்றுபவர்கள் யாவரும் சபைக்காக சேவகம் செய்பவர்கள்.

எழுத்தாளன் என்பவன் பேக்கரியில் ரொட்டி தயாரிப்பவனைப் போன்றவன் தான். ரொட்டி செய்பவன் பதமாகவும் ருசியாகவும் ரொட்டியைச் சுட்டு எடுக்க வேண்டும். அது யாருடைய பசியைத் தீர்க்கப் போகிறது என்று அவனுக்குத் தெரியாது. அதே நேரம் தான் மற்றவர்களின் பசியைத் தீர்க்கிறேன் என்று ரொட்டி தயாரிப்பவன் வீண் பெருமை பட்டுக்கொள்வதில்லை. அது அவனது கடமை. அது போல தான் எழுத்தாளனும் தன் எழுத்தின் வழியாக மனிதர்களின் அடிப்படையான தேவைகளை நிறைவேற்ற முயலவேண்டும் என்று பாப்லோ நெருதா என்ற கவிஞர் சொன்னது தான் நினைவில் தோன்றியதே.

வள்ளலாரின் கனவு தமிழ்வாழ்விற்கான அறத்தை முன்வைப்பது. அன்பை வெறும் பிரசங்கமாக மட்டுமில்லாது செயல்முறையாக மாற்றி காட்டியது. வடலு¡ரில் உள்ள சத்திய ஞான சங்கத்தை சுற்றிவரும் போது என்னோடு வந்திருந்த நண்பர் கேட்டார் இங்கே சாப்பாடு இலவசமாக கிடைக்கிறது. ஆனால் அதற்கான தொகையை யாரோ செலுத்திவிடுகிறார்கள் தானே. அப்படியானால் பணம் தானே பிரதானமானது. சாப்பாடு என்றைக்கு பணமில்லாமல் கிடைக்கிறதோ அது தானே உண்மையான தானமாகயிருக்க கூடும். நியாயமான சந்தேகம் தான். காற்றைத் தவிர மற்ற யாவும் விலை நிர்ணயிக்கபட்டுவிட்டன. யாவும் வணிகமயமாகிப்போய்விட்ட நம்காலத்தில் எது அறம். எது தருமம். நாம் தண்ணீரையே விலை கொடுத்து வாங்கும் சூழலில் வாழ்கிறோம். இந்தச் சூழலில் அன்பையும் கருணையும் எப்படி வெளிப்படுத்துவது? அடிப்படை நம்பிக்கைகளே கைவிடப்பட்டுவரும் சூழலில் அறத்தின் செயல்பாடு எத்தகையதாகயிருக்க முடியும்? இக் கேள்விகளுக்கு தீர்மானமாக பதில் இல்லை ஆனால் மனித நம்பிக்கைகள் நிருபணத்திற்கு அப்பாற்பட்டது. அது மனிதர்களின் உயர்குணங்களை முன்வைத்து எதிர்பார்க்கிறது.

தனக்கு கிடைப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பது ஜீவராசிகள் யாவற்றிருக்கும் பொதுவான வழிமுறை. நிலத்தடியில் ஒடும் தண்ணீரை ஒரேயொரு வேப்பமரம் மட்டும் உறிஞ்சிக் குடித்துக் கொள்வதில்லை. காகம் கைப்பிடி சாதத்தைக் கூட கரைந்து காகங்களை அழைத்துத் தான் சாப்பிடுகிறது. இப்போதும் நாம் நமது பிறந்த நாள். திருமண நாட்களில் மிகச் சிறப்பாக நினைப்பது விருந்தை மட்டும் தான். நல்ல உணவளிப்பது தான் நமது அன்பின் பிரதான வெளிப்பாடாகயிருக்கிறது. ஆயிரம் வார்த்தைகளை விடவும் ஒரு பிடி சோறு அதிக நெருக்கம் உண்டாக்கிவிடக்கூடியது.

ஒரு கலாச்சாரத்தை தீர்மானிப்பதில் முக்கியபங்கு வகிப்பது உணவு தான். உணவின் சரித்திரத்தை ஆராயும் போது நாகரீகத்தின் மறுபக்கத்தை அறிய முடிகிறது
வள்ளலாரின் செயல்பாடுகள் பசியை போக்குவதற்கு அறச்சாலை அமைப்பதோடு மட்டுமின்றி உடலை பேணுவதற்கான மருத்துவம், யோகம், சித்தி என விரிந்த நிலையில் செயல்பட்டுள்ளது. அவரது கடிதங்களை வாசிக்கும் போது அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளும் அதற்கான அவரது எதிர்வினையும் ஈடுபாட்டோடு வாசிக்கத் தூண்டுகின்றன. வள்ளலாரின் கையெழுத்தில் அவை பிரசுரிக்கபட்டுள்ளன. தேவைப்படுகின்றவர்கள் இந்த முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் (திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம். வடலு¡ர் 607303 தொலைபேசி. 0414 * 259250. விலை நாற்பது ரூபாய்.)

ஜீவகாருண்யம் எனும் கருணை தான் அவரது நெறிகளில் பிரதானமானது. உலகமே இன்று அந்தக் கருணையை தான் தனது முக்கிய குரலாக உரத்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக யுத்தமும் வதைகளும் வேதனைகளும் நிரம்பிய சமகால வாழ்வில் நாம் கருணையை முற்றிலும் விலக்கி வருகிறோம். புதுமைபித்தன் ஒரு கட்டுரையில் கருணை என்பது கிழங்கின் பெயராக மட்டுமே எஞ்சிவிட்டது என்று எழுதியது தான் நினைவுக்கு வருகிறது.

சத்திய ஞானசபையின் பிரம்மாண்டமான அந்த தியானவெளியில் கண்களை மூடிக்கொண்டிருக்கும் போது பிரகாரத்தில் அமர்ந்தபடி ஒரு முதியவர் நடுங்கும் குரலில் திருஅருட்பாவை பாடுவது கேட்கிறது. புறாக்கள் எங்கிருந்தோவிம்முகின்றன. தமிழ்நாட்டின் ஏதோவொரு மூலையில் அமைதியாக நடந்துவரும் இந்த அறச்சாலை நூற்றாண்டுகளைக் கடந்தும் தன்னளவில் சேவையைத் தொடர்ந்து கொண்டுவருகிறது

விடுமுறை நாட்களில் மிருகக்காட்சிசாலைகளையும். பத்தடுக்கு வணிகமையங்களையும். கேளிக்கைப் பூங்காக்களையும் காண்பதற்கு நம் குழந்தைகளை குடும்பத்தை அழைத்து போவதை விடவும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஒரு முறை வடலூருக்கு பயணம் செய்து இந்த சத்திய ஞானசபையை அறிமுகப்படுத்தினால் அது பரஸ்பர அன்பை வளர்ப்பதோடு உலகத்தோடு தான் கொள்ள வேண்டிய உறவையும் குழந்தைகளுக்குப் புரிய வைக்க கூடும்.

வாழ்வை அர்த்தப்படுத்துவது எப்போதுமே நம் கையில் தானிருக்கிறது. பலநேரங்களில் அதை நாம் மறந்துவிடுவது தான் நமது இன்றைய பலவீனம்.

- எஸ்.ராமகிருஷ்ணன்

குதம்பைச் சித்தர் பாடல்கள்

கண்ணிகள்

வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ? 1

மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ? 2

காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ? 3

வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ? 4

ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ? 5

நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி ? 6

தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி ? 7

சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி ? 8

நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி ? 9

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ? 10

உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி ? 11

வேகாமல் வெந்து வெளியெளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி ? 12

சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ? 13

அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி ? 14

ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி ? 15

சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ? 16

முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி ? 17

அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை ஏதுக்கடி - குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி ? 18

முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி ? 19

அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்
பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி ? 20

அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி ? 21

வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி ? 22

மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்
பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி ? 23

செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி ? 24

கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்
கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி ? 25

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி ? 26

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ? 27

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?

28பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி ? 29

தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ? 30

தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி ? 31

பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி ? 32

நன்றி: மதுரைத் திட்டம்
http://www.tamil.net/projectmadurai/